அதிபர் ஜோ பைடன் – உக்ரைன் அதிபர் தொலைபேசியில் பேச்சு!

ரஷ்யாவில் கலகம் ஏற்படுத்திய வாக்னர் குழுவுடன் சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றம் அடங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பெசி அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டி உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரஷ்யாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்து விவாதித்ததாகவும், அமெரிக்கா – உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் ஏற்பட்ட கலகத்திற்கு பிறகு ஜோ பைடன் – உக்ரைன் அதிபர் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.