கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 8 பேர் பலி!

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தில் 1,488 பேரும், திருவனந்தபுரத்தில் 1,182 பேரும், பாலக்காட்டில் 1,042 பேரும், எர்ணாகுளத்தில் 1,030 பேரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. திருச்சூரில் எலி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.

2017-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவியதை போன்றே தற்போதும் கேரளாவில் பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்மாநில சுகாதாரத்துறை புள்ளி விபரங்களின் படி மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புகளுக்கு 12 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தனியார் மருத்துவ மனைகள் மற்றும் கிளினிக்களிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.