தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்: ராகுல் காந்தி!

காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரகண்ட், ஹிமாசல் ஆகிய மாநிலங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தொண்டர்களுக்கு ராகுல் காந்தி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஹிமாசல், உத்தரகண்ட் மற்றும் பிற வட மாநிலங்களில் கனமழை, நிலச்சரிவு காரணமாக நேர்ந்த உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ வேண்டும். இந்த இயற்கை பேரிடரின் கடினமான சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.