அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

அமலாக்கத் துறை இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பதவி நீட்டிப்பு ஆணையை ரத்து செய்தும், மிஸ்ரா ஜூலை 31-ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த மே மாதம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பினை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வு, சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ஆணை, உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் 2021 ஆண்டு தீர்ப்புக்கு முரணானது. அதில், மிஸ்ராவின் பதவியை நவம்பர் 2021-க்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டத்தினை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், கடந்த 2021-ஆம் ஆண்டு மிஸ்ரா பதவியில் நீடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சிறப்பு ஆணையிட்டிருக்கிறது என்று தெரிவித்தது. மேலும், வரும் ஜூலை 31-ம் தேதி வரை சஞ்சய் மிஸ்ரா பதவியில் இருக்கலாம் என்றும், அதற்குள் அமலாக்கத் துறைக்கு புதிய இயக்குநரை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.