10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின் கடிதம்!

மத்திய அரசின் கையிருப்பில் இருந்து துவரம் பருப்பு, கோதுமை தலா 10 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

பண வீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன். உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதில் மாநில அரசுகளுக்கு உதவிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மெற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே பணவீக்கத்தை பொறுத்தவரையில் 2023 மே மாதத்தில் தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 12.65 சதவீதம் ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 6.56 சதவீதம் ஆகவும் இருந்தது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறி, உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம்பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது. அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, மசூர் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இருப்பு விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 10.7.2023 அன்று விரிவான ஆய்வு கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலை கடைகள் மூலம் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்திட உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கூறிய சில உணவு பொருட்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவு பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும். இந்த விஷயத்தில் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.