மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப்போவதில்லை: சௌமியா அன்புமணி

சௌமியா அன்புமணி, திமுகவின் திட்டங்கள் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.. இதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே உற்றுகவனித்து வருகின்றன.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் நிர்வாகியுமான சௌமியா அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25-ந்தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என்பது பசுமைத்தாயகம் நிறுவன தலைவரின் விருப்பம். அதற்கிணங்க 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் ஒரு நிகழ்ச்சியாக இன்று மதுரை திருமங்கலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து காலநிலை, அவசரநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு கூட்டம் நடக்க போகிறது. இதில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அதை எப்படி ஆவணம் செய்வது, பின்னர் அதை எப்படி ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களை பேசவிருக்கிறோம்.

உரிமைத் தொகை நிபந்தனை என்பது அரசாங்கத்தின் முடிவு. நிர்வாக காரணங்களால் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை சட்டரீதியாக நாம் பின்பற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். பாமக தலைவரும் தேர்தல் வாக்குறுதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். எனவே, அதை செவ்வனே செயல்படுத்த வேண்டும்.

பசுமைத் தாயகம் என்றாலே நாங்கள் சமுதாய வளர்ச்சியை முக்கியமாக பார்க்கிறோம். ஏழை, எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப்போவதில்லை. நெடுஞ்சாலைத்துறை வேலையின்போது மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக சென்னையில் ரெயில் நிலையத்தில் மரத்தை வெட்டும்போது பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். ஒரு மரம் வெட்டும்போது அதற்கு இணையாக 10, 20 அல்லது 100 மடங்கள் கூட நடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு மரத்தை எடுத்தாலும் பசுமைத் தாயகம் போராட்டம் செய்யும். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் பெரிய ஆலமரத்தை எடுத்ததற்கு, அதை வேறு ஒரு இடத்தில் நடப்பட்டு அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறோம். கனிம வளங்கள் மற்றும் நீர் வளங்களை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் பசுமைத் தாயகம் முன்னெடுத்து நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.