எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்து எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பாஜகவைச் சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் அப்பதிவை நீக்கி மன்னிப்பு கோரினார். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்து எஸ்.வி. சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி, எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிசெய்துவிட முடியாது என்றும் தமக்கு வந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு பொறுப்பானவர் எனவும் குறிப்பிட்டார்.