தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

2023 – 2024 ம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 28-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3994 அதிகம். இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் மற்றும் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் இன்று (ஜூலை 16) வெளியிடப்படுகிறது.

அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 6326 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1768 BDS இடங்களும் உள்ளன. 7.5 சதவீதத்திற்கான ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் 473 MBBS இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் உள்ளன. கடந்தாண்டைவிட நடப்பாண்டில் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகளும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரியும், 21 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 13 என 71 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 71 மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான 11475 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கான இடங்கள் 2150 உள்ளது. 20ம் தேதி அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் தொடங்கினால், தமிழ்நாட்டில் 25ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும். இதுவரை மத்திய அரசின் சார்பில் மருத்துவ கலந்தாய்விற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கவில்லை. இணையதளத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவையாக இருப்பதால் தேதியை உறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான கூட்டத்தில் நேற்று பங்கேற்றோம். இரண்டு நாட்கள் நடைபெற்ற பல்வேறு தலைப்புகளில் கூட்டம் நடைபெற்றது . அப்போதும் மருத்துவப்படிப்பில் மாணவர்களை அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும் போது, மாநில இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தினால் பாதிக்கப்படும் என்பதை எடுத்துக் கூறினோம். எனவே அவர்களும் அது குறித்து ஆலோசித்து கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறும். பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் . மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தற்பொழுது கலந்தாய்வில் இல்லாமல் உள்ள பிறப் பாடங்களை ஒற்றை சாளர முறையில் கலந்தாய்விற்கு அடுத்தாண்டில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அரசாணை வெளியிட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.