இலங்கையிலிருந்து அகதிகளாக 8 பேர் ராமேசுவரம் வந்தனர்!

இலங்கையிலிருந்து 2 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் அகதிகளாக, ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர்.

ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து படகு மூலம் 8 பேர் அகதிகளாக வந்தனர். இதுகுறித்து தனுஷ்கோடி மரைன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மரைன் போலீஸார், கடற்கரையில் நின்றிருந்த 2 பெண்கள், 5 சிறுவர்கள், ஒரு ஆண் ஆகிய 8 பேரை மீட்டு, மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நேற்று முன்தினம் இரவு மன்னார் கடல் பகுதியிலிருந்து ரூ.3 லட்சம் கொடுத்து படகில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வாழ வழியில்லாத நிலை உள்ளதாகவும், அதனால் குடும்பத்துடன் அகதிகளாக தமிழகம் வந்ததாகவும் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர், இலங்கைத் தமிழர்கள் 8 பேரும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.