கோவை டிஐஜி தற்கொலை: 8 பேருக்கு போலீஸ் சம்மன்!

கோவையில் டிஐஜி தற்கொலை செய்த விவகாரத்தில் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் ஆதாரமின்றி கருத்து தெரிவித்த 8 பேர் நாளை ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் காவல் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. டிஐஜி தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

டிஐஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிலர் சமூக வலைதளங்கள், சமூக ஊடகங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவு செய்தனர். டிஐஜி தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, டிஐஜி தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அவர்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) கோவை போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களிடம் டிஐஜி தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது? யார் அதை தெரிவித்தது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.