நெஞ்சு வலின்னு ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு பைனாப்பிள் கேசரி கேக்குதா: சவுக்கு சங்கர்!

ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் சவுக்கு சங்கர் தற்போது செந்தில் பாலாஜியை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நெஞ்சு வலின்னு ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு உனக்கு பைனாப்பிள் கேசரி கேக்குதா என்று கூறியுள்ளார்.

பிரபல பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருக்கும் சவுக்கு சங்கர் பல்வேறு ஊடகங்கள், யூடியூப் பேட்டிகளில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை முன் வைக்கிறார். இதில் பெரும்பாலானவை சர்ச்சையான கருத்துகளாகவே இருந்து வருகிறது. அரசியல்வாதிகள், ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.

முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் பலகட்ட விசாரணைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில், புழல் சிறையில் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறையை அபகரித்து தனக்கு ஏற்றார் போல் செந்தில் பாலாஜி மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சவுக்கு சங்கர் டுவீட் செய்திருந்தார்.
அதில், “இன்னும் சிறையில் மருத்துவர்கள் அறையில் அண்ணன் செந்தில் பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார். பிரகாஷ்,மோகன் என்ற இரு ரேஷன் ஸ்டோர் காவலர்கள் சிறப்பாக தயாரித்த உணவை வினியோகம் செய்தனர். இன்றும் முருகேசன் டி.ஐ.ஜி. கிருஷ்ணராஜ் கண்காணிப்பாளர் இருவரும் சீருடையின்றி காலை 7.30 மணிக்கு மருத்துவமனை சென்று கைதி செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி அவருக்கு தேவையானவைகளை செய்துள்ளனர்” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் இவர், தற்போது ஒரு டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”நெஞ்சு வலின்னு ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு உனக்கு பைனாப்பிள் கேசரி கேக்குதா” என அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் ஒரு படத்தில் கஞ்சா கருப்பு மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருக்கும் காட்சியை புகைப்படமாக பதிவிட்டிருந்தார்.