தன் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்தக்கோரிய இம்ரான்கானின் மனு தள்ளுபடி!

தன் மீதான ஊழல் வழக்கில் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தக்கோரிய இம்ரான்கானின் மனுவை தள்ளுபடி செய்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவி காலத்தின்போது மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசு பொருட்களை அரசு கருவூலத்திடம் ஒப்படைக்காமல் சட்ட விரோதமாக விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

இதற்கிடையில் ‘தோஷகானா’ என்று அழைக்கப்படும் இந்த ஊழல் வழக்கில் இம்ரான்கான் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க இஸ்லாமாபாத் விசாரணை கோர்ட்டு வழக்கை விசாரிக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, இம்ரான்கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் ‘தோஷகானா’ ஊழல் வழக்கில் தன் மீதான சட்ட நவடிக்கைகளை நிறுத்திவைக்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளூபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இம்ரான்கான் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் விவாகரங்களில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என கூறி இம்ரான்கானின் மனுவை தள்ளுபடி செய்தனர்.