மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு!

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் 20 எம்.பி.க்கள் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நோட்டீசை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் எப்போது எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மணிப்பூர் மக்களைச் சந்திக்கும் நோக்கில் ‘இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். இந்தக் குழுவில் திமுக எம்.பி. கனிமொழி, விசிகவின் தொல் திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய், பூலோ தேவி நீத்தம், கே.சுரேஷ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மியின் சுஷில் குப்தா, சிவ சேனாவின் அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங், அனீல் பிரசாத் ஹெக்டே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஏ ரஹிம், ஆர்ஜேடியின் ஜாவேத் அலி கான், சமாஜ்வாடி கட்சியின் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிபி முகமது ஃபைசல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடி முகமது பஷீர், விசிக ரவிக்குமார், ஆர்எஸ்பி என்கே பிரேமசந்திரன், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா கூட்டணி எம்பிக்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய விமானத்தில் மணிப்பூருக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது தலைநகர் இம்பால் சென்றடைந்துள்ளனர். இவர்கள் இன்றும் நாளையும் மாநிலத்தில் கலவரம் பாதித்த இடங்களுக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிய திட்டமிட்டுள்ளனர். மேலும் கலவரத்தால் வீடுகளை இழந்த மக்களையும் இவர்கள் சந்திக்கிறார்கள். அது போல் இரு சமூகத்து மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.