ராகுலின் திருமணம் குறித்து கேட்ட விவசாயிக்கு சோனியா பதில்!

‘ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வைய்யுங்கள்’ எனக் கூறிய ஹரியாணா பெண் விவசாயிடம், ‘நீங்கள் அவருக்கு பொருத்தமானப் பெண்ணாக பாருங்களேன்’ என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

தனது சமீபத்திய ஹரியாணா பயணத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹரியாணா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பெண் விவசாயிகள் சிலர் சமீபத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் அவரது தாயார் சோனியா காந்தி வசித்து வரும் 10 ஜன்பாத் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “சில சிறப்பு விருந்தினர்களுடன் எனக்கு, அம்மாவுக்கு, பிரியங்காவுக்கு மறக்க முடியாத நாள். சோனிபட்டைச் சேர்ந்த விவசாய சகோதரிகள் சிலர் டெல்லி வந்தனர். அவர்களுடன் சில பரிசு பொருள்களையும், வேடிக்கைப் பேச்சையும் கொண்டு வந்தனர். உள்ளூர் நெய், இனிப்பு லஸ்ஸி, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் அப்புறம் நிறைய அன்பு என நாங்கள் விலைமதிப்பில்லா பரிசு பொருள்களை சேர்ந்து பெற்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அந்தச் சந்திப்பின்போது ஹரியாணாவைச் சேர்ந்த பெண் விவாசாயி ஒருவர், “ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வைய்யுங்கள்” என்று கூறுகிறார். அதற்கு “அவனுக்கு பொருத்தமான பெண்ணாய் பாருங்களேன்” என்று சோனியா காந்தி, அப்பெண்ணுக்கு பதில் சொல்கிறார். இந்த உரையாடலில் இடைபுகுந்த ராகுல் காந்தி “அது (திருமணம்) கண்டிப்பாக நடக்கும்” என்று கூறுகிறார்.

பெண்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “ராகுல் பார்க்க இனிமையாக இருக்கிறார் இல்லையா? அவர் என்னைவிட மிகவும் குறும்பானவர். என்னை அதிகம் திட்டுவார்” என்கிறார்.

இந்த வேளையில் பெண் விவசாயி ஒருவர், ‛‛ராஜீவ் ஜி மரணமடைந்தபோது உங்களின் மகன், மகள் இளம் வயதில் இருந்தனர். அத்தகைய சூழலை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?” என சோனியா காந்தியிடம் கேட்டார். இந்த கேள்வியை கேட்டவுடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் சோனியா காந்தி, ‛அதிகமாக என்னை பாதித்தது’ என்று மட்டும் கூறி அமைதியானார்.

இதையடுத்து பிரியங்கா காந்தி தழுதழுத்த குரலில் தனது தாய் சோனியா காந்தி பட்ட கஷ்டங்களை எடுத்து கூறினார். பிரியங்கா காந்தி கூறுகையில், ‛‛அந்த சம்பவம் அதிகம் பாதித்தது. அது ஏற்படுத்திய காயங்கள் மிக ஆழமானது. நீண்டகாலமாக என தாய் ‛அப்செட்’ ஆகியிருந்தார். உணவு, தண்ணீர் இன்றி பல நாட்கள் அவர் வருத்தமாக இருந்தார். அது மிகவும் கொடூரமான நேரம்” எனக்கூறி கலங்கினார். ராகுல் காந்தியின் முகம் இறுக்கமாக காணப்பட்டது. இதை பார்த்த இன்னொரு பெண் விவசாயி, ‛‛கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்” எனக்கூற சோனியா காந்தி சிரித்தார்.

சோனியா காந்தியின் கணவரான ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தவர். 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் ராகுல் காந்தி 21 வயது நிரம்பியவராகவும், பிரியங்கா காந்தி 19 வயது நிரம்பியவராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8-ம் தேதி ஹரியாணா மாநிலத்தின் சோனிபட்டில் உள்ள மதீனா என்ற கிராமத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுடன் உரையாடி நேரம் செலவளித்தார். அவர்களுடன் வயல்களில் வேலை செய்தார். அப்போது, அந்த விவசாயிகள் தலைநகருக்கு மிக அருகில் தாங்கள் வசித்தாலும் இதுவரை டெல்லியை பார்த்ததில்லை என்று கூற, அவர்களை டெல்லிக்கு அழைப்பதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

‘ராகுல் காந்தி விவசாய சகோதரிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தர். விவசாய சகோதரிகள் டெல்லி வந்தனர். ராகுலின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது’ என்று காங்கிரஸ் கட்சி அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.