புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்- 3

நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் சென்றுள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

நிலவை ஆராயச் சென்ற சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20 நாட்களாக பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கி.மீ தூரம் விண்கலம் பயணித்துள்ளது. தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன் – 3 விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசையால் இயக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 19 நாள்கள் மிக முக்கியமானமவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. இந்நிலையில், புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம், நிலவை சுற்றத் தொடங்கியது. சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், நாளை இரவு 11 மணிக்கு சுற்றுவட்டப்பதையை குறைப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இம்மாத இறுதியில் நிலவை சென்றடையும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.