கோர்ட்டு நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது: கபில்சிபல்

ராகுல் காந்தி வழக்கில் நான் கூறிய காரணத்தையே சுப்ரீம் கோர்ட்டும் கூறியிருக்கிறது என கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் நிறுத்தி வைத்தது. அவருக்கு அதிகபட்ச தணடனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை கோர்ட்டு தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை, காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல் வரவேற்று உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்து உள்ளது. இந்த தண்டனை தேவையற்றது எனவும், அது சுப்ரீம் கோர்ட்டில் நிற்காது என்றும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட அன்றே நான் கூறினேன். நான் கூறிய காரணத்தையே நேற்று (நேற்று முன்தினம்) சுப்ரீம் கோர்ட்டும் கூறியுள்ளது’ என தெரிவித்தார். கோர்ட்டு நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதாக அவர் வேதனையும் வெளியிட்டு உள்ளார்.