அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என்பது கடினமானது: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என கூறுவது கடினம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நாடாளுமன்றம் கடந்த 2019-இல் ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டம், 2019-இன்படி, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அரசியல்சாசன அமா்வுக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது தலைமை நீதிபதி, ‘ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை. இணைப்பின்போது அதன் இறையாண்மை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா் இணைப்பு அப்போதே முற்றிலும் முழுமையாகிவிட்டது. அரசியல் சாசனத்தின் 1-ஆம் பிரிவு இந்தியாவில் இடம் பெறும் பிரதேசங்களைப் பட்டியலிடுகிறது. அதில் ஜம்மு-காஷ்மீா் இடம் பெற்றுள்ளது. அப்போதே அது இந்தியாவின் ஒரு பகுதியாகிவிட்டது. பிரிவு 370 என்பது அங்கு நாடாளுமன்றம் சட்டமியற்றும் வரம்பு குறித்தானது. பிரிவு 370-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட விவகாரங்களில் ஜம்மு-காஷ்மீருக்கு இறையாண்மை உள்ளது என எடுத்துக் கொள்ள முடியாது’ என்றாா்.

இதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜாஃபா் ஷா, ‘‘ஜம்மு-காஷ்மீரைப் பொருத்த வரை பாதுகாப்பு, தகவல்தொடா்பு, வெளியுறவு ஆகிய விவகாரங்களில் மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிற ஏதேனும் சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ அதிகாரம் இல்லை. பிரிவு 370-இன்படி அரசியலமைப்பு அளித்த அதிகாரங்களின்கீழ் ஜம்மு-காஷ்மீா் தன்னிச்சையாகச் செயல்பட முடியும்’’ என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபிதி சஞ்சய் கிஷண் கெளல், ‘‘பிரிவு 370 நிரந்தரமானது என்று கூறுவது கடினம். நாட்டின் பிற பகுதியில் செயல்படும் எல்லா சட்டங்களையும் ஜம்மு-காஷ்மீா் அமல்படுத்த விரும்பினால், பிரிவு 370 என்ன ஆகும்? அந்தப் பிரிவை ரத்து செய்ய நாடாளுமன்றம் பின்பற்றிய வழிமுறைதான் இப்போது கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள கூடியதா இல்லையா என்பதுதான் கேள்வி’’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த வழக்குரைஞா் ஷா, ‘‘சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது ஜம்மு-காஷ்மீா் அரசியலமைப்பு நிா்ணய சபை இல்லை. ஆகையால், பிரிவு 370-இன் நிரந்தரத் தன்மை குறித்து பல்வேறு அனுமானங்கள் நிலவுகின்றன’’ என்றாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆக. 16 நடைபெறும்.