பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வன்முறையாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட வேண்டுமென பிரதமர் மோடிக்கு மணிப்பூர் எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே 3 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த கலவரத்தில் 160-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அகதிகளை போல நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வன்முறையாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மணிப்பூரின் 40 எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் மெய்தி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பிரதமருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாதுகாப்பை உடனடியாக நிறுவுவதற்கு, எளிய படைகளை அனுப்புவது போதுமானதாக இல்லை. புறவட்டாரப் பகுதிகளில் வன்முறையை நிறுத்துவது இன்றியமையாததாக இருந்தாலும், இந்த இலக்கை அடைவதற்கு முழுமையான ஆயுதங்களை பறிமுதல் செய்வது முக்கியமானது. அமைதி மற்றும் பாதுகாப்பின் சூழலை வளர்ப்பதற்கு முழு மாநிலத்திற்கும் முழுமையான ஆயுத களைவு தேவைப்படுகிறது. கிளர்ச்சி குழுக்களின் ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதமேந்திய வெளிநாட்டுப் படைகள் மற்றும் அரசு எந்திரத்தில் இருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இது சம்பந்தமாக மத்திய பாதுகாப்பு படைகள் மிகவும் முனைப்பான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வயல்களுக்கு வேலைக்கு செல்லும் விவசாயிகள் வன்முறையாளர்களால் சுடப்படும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மத்திய பாதுகாப்புப் படையினரின் முன்னிலையில் நடந்துள்ளன. அவை (மத்திய பாதுகாப்பு படைகள்) சரியான முறையில் செயல்பட தவறிவிட்டன, அல்லது எதிர்வினையாற்றவில்லை. மணிப்பூரின் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. ஒருபுறம், மணிப்பூரின் பழங்குடியின மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தலாம். அதேபோல் புலம்பெயர்ந்தோரின் பயோமெட்ரிக் பதிவுகளை விரிவுபடுத்தி பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.