மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மம்தா

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரதமரின் பொது நிதி, ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஊழலில் ஈடுபட்டுள்ளதால் பிரதமரால் ஊழல் குறித்து பேச முடியாது. பிரதமர் ஆதாரமின்றி எதிர்க்கட்சிகளின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். நாட்டில் ஏழை, எளிய மக்கள் குறித்து பாஜகவுக்கு கவலையில்லை. பிரதமர் இந்தியாவை தவறாக வழிநடத்துகிறார். பிரதமர் அவரது கட்சியில் உள்ளவர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து பேசுவதில்லை.

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கு வங்க தேர்தலின் போதும் 16 பேர் உயிரிழந்தனர். மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு எனக் கூறியது போல தற்போது நாடு முழுவதும் பாஜவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கிறது. நாங்கள் அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேறக் கூறவில்லை. அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற கூறுகிறோம். பாஜகவே வெளியேறு. இவ்வாறு அவர் கூறினார்.