நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கையை நேரில் சந்தித்த தங்கம் தென்னரசு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்துடன் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த பள்ளிச் சிறுவனையும் அவரது சகோதரியையும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடியோ கால் மூலம், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறுவனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார். சிறுவனின் தாயாரிடமும் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “நாங்குநேரி சம்பவம் பற்றிய தகவல் வெளியானதுமே முதல்வர் என்னை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட சிறுவனையும், சிறுமியையும் நேரில் சென்று பார்க்கும்படி கூறினார். கூடவே அவர்களது பெற்றோரிடம், அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று எடுத்துரைக்கும்படி கூறினார். அதுமட்டுமல்லாது முதல்வரே வீடியோ காலில் பேசி சிறுவனின் தாயிடம் ஆறுதல் கூறினார். அரசு உதவிகள் செய்யும் என்று நம்பிக்கை அளித்தார்” என்று கூறினார்.

வன்கொடுமை தீருதவி தடுப்பு சட்டத்தின் கீழ் தீருதவி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5,20000/- தீருதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 25 சதவீதம் அதாவது ரூ.ரூ. 1,30000/- வழங்கப்பட்டது. அதேபோல் சிறுமிக்கு தீருதவியாக ரூ. 2,50000/- ஒதுக்கப்பட்டு முதல் தவணை ரூ.ரூ. 62500/- என மொத்தம் ரூ.1,92500/- தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகன் வள்ளியூரிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் ஒரு கும்பல் புகுந்து பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டியது. தடுக்க முயன்ற அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்களது உறவினர் கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று நாங்குநேரி போலீஸார் பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலியிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த மேலும் ஒரு மாணவர் இன்று (சனிக்கிழமை) காலை கைது செய்யப்பட்டார்.