அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு உடல்நிலை சீரடைந்ததையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்ற காவல் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனைத் தொடர்ந்து அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவரது மனைவி பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.