முன்னாள் அதிபர் ட்ரம்ப் சரணடைய நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மறைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி ட்ரம்ப் மற்றும் அவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள 18 பேரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக சரணடைய வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் 18 பேர் மீது மீது ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஃபுல்டன் கவுண்டி மாவட்ட நீதிபதி பானி வில்லீஸ் நடத்திய இரண்டு ஆண்டுகள் விசாரணையைத் தொடர்ந்து இந்த குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியாவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது தோல்வியை மாற்றியமைக்க ட்ரம்ப் முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பானி வில்லீஸ் இந்த விசாரணையை நடத்தினார்.
அதாவது, ஜார்ஜியாவைச் சேர்ந்த 16 பேரை ஒருங்கிணைத்த ட்ரம்ப், அவர்களை போலி வாக்காளர்களாக பயன்படுத்தினார். தான் வெற்றிபெற்றதாகவும் அறிவித்துக்கொண்டார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. ட்ரம்புடன் இணை சதிகாரர்களாக அவரது வழக்கறிஞர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

ட்ரம்புக்கு எதிரான 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 98 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், அரசு பதவியில் இருந்துகொண்டு சத்திய பிரமாணத்தை மீறுதல், மோசடி ஆவணங்களை தாக்கல் செய்தல், மோசடியில் ஈடுபடுதல் மற்றும் பொய்யான வாக்குறுதிகள் அளித்தல் ஆகியவற்றில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார். ஜார்ஜியா தேர்தல் சட்டத்தில் இரண்டை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார்.

தேர்தல் தோல்வியை ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அத்துடன் சட்டவிரோதமாக சதி செய்து ட்ரம்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவை மாற்றியுள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் தரப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ட்ரம்ப் மற்றும் அவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள 18 பேரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக சரணடைய வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள 19 பேரையும் ஒன்றாக விசாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றசாட்டையும் நீதிபதி மறுத்துவிட்டார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னணி இடம் வகிக்கும் ட்ரம்ப் மீது தொடரப்பட்ட 4வது கிரிமினல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.