கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தேசியக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சுதந்திர தின உரையில் கூறியதாவது:-

கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் திராவிட மாடல் அரசு: எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுமைக்குப் பரவுமானால், அதை விட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது. கூட்டாட்சி இந்தியாவில் இணைந்திருக்கும் மாநிலங்கள் சுயாட்சி உரிமை கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள்.

மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி, மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும். மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம் – மொழி – மதம் – பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர வேண்டும். சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம் – சமதர்மம் – மதச்சார்பின்மை – ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அத்தகைய சமத்துவ, சமதர்ம, சமூக நீதி இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.