இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு இந்தியா கண்காணிப்பு விமானம் ஒன்றை வழங்கி உள்ளது.

இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது. அதன்படி டோர்னியர்-228 ரக கடல்சார் கண்காணிப்பு விமானத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இந்த விமானம் கடந்த ஓர் ஆண்டு காலமாக இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியது. அதை தொடர்ந்து வருடாந்திர பாரமரிப்புக்காக டோர்னியர்-228 விமானத்தை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைந்தது.

இந்த நிலையில் பாரமரிப்புக்காக வந்துள்ள டோர்னியர்-228 விமானத்துக்கு மாற்றாக மற்றொரு டோர்னியர்-228 விமானத்தை இலங்கைக்கு இந்தியா நேற்று வழங்கியது. காட்டுநாயக்காவில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.