எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்திவிட்டது.

எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி பகிர்ந்திருந்தார். இதனால் அவர் மீது பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அது குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்ய மறுத்தது. தற்போது உச்ச நீதிமன்றமும் ரத்து செய்ய மறுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் தொடர்ந்த மனு, நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஷ்ரா அமர்வு முன் இன்று (ஆகஸ்ட் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி. சேகர் தரப்பில் வழக்கறிஞர் நாகமுத்து ஆஜரானார். அப்போது வாதத்தை முன்வைத்த அவர், “எஸ்.வி.சேகர் கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு இருந்தபோது தவறுதலாக அவரது கை விரல்கள் send பட்டனை அழுத்திவிட்டன. அதனால் அந்தச் செய்தி ஃபார்வர்டு ஆகிவிட்டது“ என கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டிருப்பவர் ஏன் சமூக ஊடகங்களில் செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர் வழக்கறிஞர் நாகமுத்து, “சமூக வலைதளங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டன. அதை தவிர்ப்பது கடினம்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “சமூக வலைதளங்கள் மிகவும் அவசியம் என நாங்கள் கருதவில்லை. சமூக ஊடகங்களில் இருந்து நாங்கள் விலகி இருக்கிறோம். எஸ்.வி.சேகருக்கு என்ன வயது? “என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, அவருக்கு 72 வயதாகிறது என வழக்கறிஞர் நாகமுத்து தெரிவித்தார்.

அப்போது, “இந்த வயதில் அவர் இதை எல்லாம் ஏன் செய்கிறாரா? அவர் ஏன் சமூக ஊடக செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்? சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என கூறினர்.

மேலும் அவர்கள், “சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட முடியாது. அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது” என்று கூறினர்.