அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் முறைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!

கோயில் ஆகமங்களை படித்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கும், அதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு எதிராக அந்த கோயிலில் பணிபுரிந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். ஆகம விதிகளை பின்பற்றாமல் இந்த அறிவிப்பு வந்துள்ளதாக அந்த மனுவில் குற்றம்சாட்டி இருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி, கோயிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற யாராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என தீர்ப்பு அளித்து இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வுக்கு முத்து சுப்பிரமணிய குருக்கள் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தீர்ப்பை உறுதி செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஆகமம் பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் பல்கிவாலா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் முத்து சுப்பிரமணிய குருக்களின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன் ஆகமம் பயின்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.