வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வழிப்பறி செய்த இலங்கை கடற் கொள்ளையர்கள்!

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் படகுகளில் சென்று ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி, கம்பி, கட்டையைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். பொருட்களை பறித்துக்கொண்டு தமிழக மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதில் மீனவர் பாஸ்கரை தலையில் கம்பியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருள்ராஜ் என்ற மீனவரை கத்தியால் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள் ஆற்காட்டுத்துறை கடற்கரைக்கு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருள்ராஜ், பாஸ்கர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கருக்கு 21 தையல் போடப்பட்டுள்ளது. மேலும் செந்தில் அரசன், மருது, வினோத் ஆகிய மூன்று பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.