பாதுகாப்பான புதிய பாதையில் ரோவர் சென்று கொண்டுள்ளது: இஸ்ரோ!

பாதுகாப்பான புதிய பாதையில் ரோவர் சென்று கொண்டிருப்பதாக புதிய புகைப்படங்களை வெளியிட்டு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டரில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

தற்போது இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில், ஆக.27-ஆம் தேதி 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை 3 மீட்டருக்கு முன்னதாகவே ரோவர் கணித்து, அதன் பாதையை மாற்றி பயணித்ததாக தெரிவித்துள்ளது. மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவா் நிலவின் மீது தரையிறங்கும் காணொலியை இஸ்ரோ வெளியிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை, ரோவர் நகர்ந்து செல்லும் விடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.