எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக பேசியதாக வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல பெரியார் சிலையை உடைப்பேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும் எச்.ராஜா மீது வழக்குகள் பதியப்பட்டன.

இதுபோல தமிழகம் முழுவதும் தன் மீது பதியப்பட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அதில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குறித்த வழக்கில், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் செவி வழி செய்திதான். அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதேபோல், பெரியார் சிலையை உடைப்பேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படும் வழக்கில், தனக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் சேகரிக்கப்படவில்லை.

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள விவகாரத்தைப் பொருத்தவரை, அது வெறும் அரசியல் சார்புடைய கருத்துகள்தான். மேலும், கனிமொழி இதுதொடர்பாக புகார் அளிக்காத நிலையில், வழக்கில் தொடர்பில்லாத மூன்றாவது நபர் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், எச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமின்றி, அனைவரையும் பாதிக்கும் வகையில் உள்ளது. அவரது பேச்சுகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்ய முடியும். எனவே, எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறை தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, 11 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மூன்று நிகழ்வுகள் தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்குகளையும் ஒரே வழக்காக சேர்த்து, 3 மாதங்களுக்குள் கீழமை நீதிமன்றங்கள் விசாரித்த முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.