சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள சுங்கச் சாவடிகளிலும் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. சாலைகளை சீரமைப்பதில் அக்கறை செலுத்தாத சுங்கச் சாவடிகள் தற்போது பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருவதாக மக்கள் கருதுகின்றனர். சுங்க கட்டண உயர்வு என்பது வணிகர்கள், லாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெறுவதோடு, தமிழ்நாட்டில் காலாவதியாகியும் இயங்கக் கூடிய சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.