நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா: அண்ணாமலை!

தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே!? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த மோகன் ராஜ், பாஜக நிர்வாகி என்றும், அவர் மற்றும் அவரது குடும்பத்தினரே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் அருகில் மது அருந்தியவரை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட மோகன்ராஜ், பாஜக மாதப்பூர் ஊராட்சி கிளையின் தலைவராக உள்ள நிலையில், இந்தப் படுகொலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை பாஜக தலைவர் சகோதரர் மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?

தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே!? குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.