அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவேன்: சீமான்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவ ரூ 10 கோடி அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ 100 கோடி தருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது சனாதனம் குறித்த பிரச்சினை தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. உதயநிதி மீது மாநில காவல் நிலையங்களில் பாஜகவினரும் சனாதனவாதிகளும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரும் இந்து அமைப்புகளும் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். சனாதனம் என்பதை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும் என்றும் அவற்றை டெங்கு, கொரோனா, மலேரியா போல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் உதயநிதி சென்னையில் ஒரு மாநாட்டில் பேசியதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக உள்ளது. உதயநிதியின் இந்த கருத்துக்குத்தான் பாஜகவினர் உள்ளிட்டோர் எதிர் கருத்துகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர்தான் உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு உதயநிதி பதிலளிக்கையில் என் தலையை சீவ எதுக்கு ரூ 10 கோடி , 10 ரூபா சீப்பு இருந்தால் போதுமே என நக்கலடித்திருந்தார். இந்த நிலையில் 10 கோடி சன்மானத்தை அயோத்தி சாமியார் அதிகரிக்கவும் தயார் என முறைத்தபடியே தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் அயோத்தி சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ந்து வருகிறது. ஆங்காங்கே உதயநிதியை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சாமியாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. ஒரு அமைச்சரை சாமியார் மிரட்டுவதா அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன.

இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், “இந்த பாஜக ஆட்சியில், முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் செய்தது கிடையாது. எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பாரத் என்று வையுங்கள், இல்லை சூரத் என்று வையுங்கள். அது அவர்கள் நாட்டுக்கு பெயர் வைக்கின்றனர். அதில் நான் தலையிட முடியாது. என் நாடு தமிழ்நாடு. அதனால், அவர்கள் நாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளட்டும். வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் என்பதால் பெயர் மாற்றுகின்றனர். இந்த நாடே அவன் உருவாக்கி வைத்த நாடுதானே. வில்லியம் ஜேம்ஸ் கையெழுத்திட்டதால்தானே இந்து என அறியப்பட்டீர்கள். அந்த பெயரையும் மாற்றிவிடுங்கள். பாரத் என்ற பெயர் வைத்துவிட்டு, இந்துவுக்குப் பதில் வேறு பெயர் வைக்கட்டும்.

நாட்டுக்கு பெயர் மாற்றுவதால் என்ன ஆகப்போகிறது. 150 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. பெயரை மாற்றியதால் தள்ளுபடி செய்துவிடுவார்களா? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பசியில்லாத பாரதம் அப்படியெல்லாம் உருவாகி விடுமா? ஆட்சிக்கு வந்தபோதே பாரத் என்று ஏன் பெயர் மாற்றவில்லை? 4 மாதத்தில் தேர்தல் வருவதால், சிலிண்டர் விலை குறைகிறது. சட்ட விதிகளின் பெயர்கள் எல்லாம் மாறுகிறது. சந்திராயன் சரியாகச் சென்று நிலவில் இறங்குகிறது. சூரியனுக்கு ஆதித்யா செல்கிறது. இவர்கள் சேட்டை எல்லாம் சகித்துக்கொள்ள முடியாது. அதிகாரத் திமிரில் ஆட வேண்டியதுதான்.

இந்தியா ஒரு நாடல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆல் இந்தியா ரேடியோதான். இந்தியா ரேடியோ கிடையாது. மாநிலங்களவைதான் அது, மாநிலங்கள் என்றால், பல தேசங்களின் ஒன்றியம்தான் அது. அப்படியிருக்கும்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே தேர்வு, நான் கேட்கிறேன் ஒரே நீர் எங்கே? ஒரே நாடு என்றால், காவிரியில் ஏன் தமிழகத்துக்கான நீரைப் பெற்றுத் தரமுடியவில்லை உங்களால்? ஒரே நாடு குறித்து பேசும் நீங்கள் ஏன் அங்கு வாய்மூடி மவுனமாக இருக்கிறீர்கள்?” என்றார்.

அப்போது அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான்கூட சொல்கிறேன், அந்த சாமியார் தலையை வெட்டினால் 100 கோடி தருகிறேன். சாமியார் என்பவர் அனைத்தையும் துறந்த பற்றற்றவர், சாந்தமே உருவானவர்கள். ஆனால், அந்த சாமியார் ரவுடி போல் பேசியிருக்கிறார். உதயநிதி கருத்து கூறியிருந்தால், அவரது கருத்துடன் மோதியிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் இருக்கிறது. மனிதனில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருக்கிறான் என்று அவர்கள் பேசியிருக்க வேண்டும். இந்த கருத்தில் நான் உடன்படவில்லை. மனித பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு பார்க்கும் எவனும் என் எதிரிதான். சாமியர்களுக்கு சாதியும், மதமும் இரண்டு கண்கள். மதத்தின் வேர் சாதி. நாங்கள் எல்லாம் இந்துக்கள் என்று சாமியார்கள் கூடவில்லை என்றால், அவர்களுக்கு பத்து பைசா தரமாட்டார்கள். அதனால், அவர்களுக்கு சனாதனம் வேண்டும். பிறப்பின் அடிப்படையில் பேதம் வேண்டும். நாக்கை வெட்டுவது, தலையை வெட்டுவது என பேசுகிறாரே இவர் என்ன சாமியாரா இல்லை கசாப்புகடைக்காரரா என்று அவர் கூறினார்.