மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது: சஞ்சய் ராவத்!

மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். அவரது அந்த பேச்சை நான் கேள்விப்பட்டேன். யாரும் இதை ஆதரிக்க மாட்டார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இது தி.மு.க.வின் பார்வையாகவோ அல்லது அவரது தனிப்பட்ட பார்வையாகவோ இருக்கலாம். சுமார் 90 கோடி இந்துக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். மற்ற மதத்தினரும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்த கூடாது. நாட்டின் நிலைமை மோசமடையக் கூடாது. எங்கள் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது. மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. அவர் எங்களுடன் இணைந்து இருக்கிறார். எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.