குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்: ஜிகே வாசன்

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றும், அரசு காலதாமதமின்றி நிவாரணம் தர வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு முறையே கொடுக்க தவறிய காரணத்தினால் விவசாயிகள் மிகவும் மனக்கஷ்டத்திலும், பொருளாதார நஷ்டத்திலும் இருக்கிறார்கள்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், போதுமான தண்ணீர் கடை, மடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகிப் போயிருப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள்.

எனவே பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.