குஷ்பு கோவிலை இடிக்காமல் விட்டது எங்களது பெருந்தன்மைதான: சீமான்

தமக்கு தமிழர்கள் கோவில் கட்டியதாக சொல்லி பாஜக நடிகை குஷ்பு பெருமிதம் தெரிவித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என பேசியிருந்தார். இந்த விவகாரத்தில் பாஜகவின் நடிகை குஷ்புவும் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், முஸ்லிம் பின்னணியில் பிறந்த எனக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். அதுவும் சனாதனம்தான் என எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீமான் கூறியதாவது:-

இதெல்லாம் சனாதனமா? மாட்டு சாணிதான். ஏங்க ஒரு பெண், தனக்கு கோவில் கட்டி வணங்குகிறான் என்பதை ரசித்தால் என்ன மனநிலை? இதுதான் சனாதனம் என்றால் அதை ஏற்கிறீர்களா? உங்களுக்கு கோவில் கட்டி துதிபாடுகிற வழிபாட்டு முறையை ஏற்கிறீர்களா? இதெல்லாம் தமிழ் மக்களின் அறியாமையையும் அறிவுகெட்ட தனத்தையும் காட்டுது. முட்டாள்தனத்தையும் மூடத்தனத்தையும் காட்டுது. இவுகளுக்கு கோயில் கட்டுனதுதான் சனாதனமா? இதை ஏற்கிறீங்களா? ஒவ்வொருத்தனும் உங்க காலை கழுவி குடிக்கனும்.. உங்க காலில் விழுந்து கும்பிடனும்.. கோவில் கட்டி வணங்கனும். இது எவ்வளவு கொடூரமான மனநிலை. அதை குஷ்பு பேசுவது எவ்வளவு வலியாக இருக்கிறது. அந்த கோவிலை இடிக்காமல் விட்டது எங்களது பெருந்தன்மைதானே. எங்க இருக்குன்னு பாருடா. இவ்வாறு சீமான் கூறினார்.