முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்!

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்பட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, சர்வதேச அளவில் அறியப்பட்ட ஐந்து பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன் ஆகியோர் இடம்பெற்றனர். ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவர். பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்தப் பதவியிலிருந்து வெளியேறியவர். தொடர்ந்து, உலகப் பொருளாதார நிலையை ஆராய்ந்து வரும் ரகுராம் ராஜன், தமிழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார்.

அவ்வப்போது, பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார். அந்தவகையில் சமீபத்தில் கூட ரகுராம் ராஜனுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார். மாதம் ரூ.1,000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று ரகுராம் ராஜன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரகுராம் ராஜன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.