நீங்கள் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதி அல்ல: ஆளுநர் ரவிக்கு ‘குட்டு’ வைத்த சவுக்கு சங்கர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டி, சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர் விமர்சித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதே சமயத்தில், நரேந்திர மோடியின் கொள்கைக்கு நேர் எதிரான திராவிடக் கொள்கையை தமிழகம் முழுவதும் பரப்பிய பெரியாரின் பிறந்தநாளும் நேற்று தான் கொண்டாடப்படுகிறது. இது ஒரு நகைமுரணாகவே பார்க்கப்படுகிறது. இதையொட்டி, சமூக வலைதளங்களில் பாஜகவினரும், திமுகவினரும் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடியை திமுகவினரும், பெரியாரை பாஜகவினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு மக்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார்கள். உலகுக்கு வழிகாட்டியாக நம் நாட்டை உருவாக்க பாடுபட்டு வரும் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அவர்கள் கடவுளை வேண்டுகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் ரவியின் இந்த வாழ்த்து டுவீட்டை ரீ-டுவீட் செய்த சவுக்கு சங்கர், “நீங்கள் ஆளுநர் என்ற முறையில் தான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவிப்பார். நீங்கள் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதி அல்ல” என அவர் கூறியுள்ளார்.