திமுக ஐடி விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஆர்எஸ்எஸ்.!

திமுகவின் ஐடிவிங் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவகாரம் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்பாரத செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆர்.எஸ்.எஸ். என்றழக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் 1925-ம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 98 ஆண்டுகளாக பாரத தேசத்தை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசபக்தி நிறைந்த இளைஞர்களை உருவாக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பணி: இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக் காக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேசத்துக்கும் மக்களுக்கும் நெருக்கடி, துன்பம் வரும் போது தன்னலம், சுய விளம்பரம் இல்லாமல் ஓடிச் சென்று துயர் துடைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

சீனா, பாகிஸ்தான் நாடுகள் நம் மீது படையெடுத்த போது ராணுவ வீரர்களுக்கு துனை நின்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை 1963-ம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் பங்கேற்க செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு முதற்கொண்டு சுனாமி தாக்குதல் வரை மக்கள் உயிர் ,உடைமைகளை இழந்த போது அவர்களைக் காப்பாற்ற ஓடி சென்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களே. கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்ட போது தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் மக்களின் மருத்துவம், உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன் களத்தில் நின்று பணியாற்றியதை நாடறியும். இவை தவிர நாடு முழுவதும் 1.50 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சுய விளம்பரமின்றி தாய்நாட்டு சேவை என கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தை ஆட்சியும் திமுக கட்சியின் ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து உள்நோக்கத்துடன், மக்கள் மத்தியில் கலவரத்தையும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு ஒன்றை 22.09.2023-ல் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இவன் மூலமாக புல் புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்!” என்ற தலைப்பில் ஆதாரமற்ற குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

1948-ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க 1966-ல் அமைக்கப்பட்ட நீதியரசர் ஜே.எல். கபூர் கமிஷன், 407 ஆவணங்கள், 101 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை; இந்த கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014-ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 25.8.2016-ல் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜூன்சிங் ஆகியோரும் இதேபோல பேசி, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்பும் திமுகவின் ஐடி விங் தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி உள்ளது. ஜனநாயக முறையில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐடி விங்கின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ள இந்தப் பதிவை உடனே நீக்குவதோடு, திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் திமுக ஐடி விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். இயக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.