நான் புலி, பூனையுடன் சண்டைக்கு போக மாட்டேன்: சீமான்

அண்ணா குறித்து விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலையை எதிர்த்து அ.தி.மு.க. பேசியது பாராட்டுக்குரியது என்று கோவையில் சீமான் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார். அவரை அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள சித்ரா பகுதிக்கு வந்தார். அங்கு நாம் தமிழர் கட்சி கொடியை சீமான் ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கி விட்டோம். நான் ஒரு தமிழ் தேசிய மகன் என்பதால் தமிழ் நிலத்துக்கான தேர்தலில்தான் போட்டியிடுவேன். ஆனால் தமிழகத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். மேற்கு வங்காளத்தில் மம்தாவை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்டு, கங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் எதிராக இருக்கிறது. டெல்லி, பஞ்சாப்பில் கெஜ்ரிவால் காங்கிரசை எதிர்க்கிறார். ஆனால் இந்தியா என்ற கூட்டணியில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இதனால் இந்த கூட்டணி வேடிக்கையானதாக இருக்கிறது.

பேரறிஞர் அண்ணாவை பற்றி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து என்ன?, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்து இருப்பார்கள். ஆனால் அண்ணாவை கொடியில் வைத்திருக்கும் அ.தி.மு.க. அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்று குரல் கொடுத்து இருக்கிறது. இதில் அ.தி.மு.க.வின் செயல்பாடு பாராட்டுக்குரியது. எடப்பாடி பழனிசாமி இதற்கு கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும் 2-ம் கட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது பாராட்டுக்குரியது.

வீரலட்சுமியின் கணவருடன் குத்துச்சண்டைக்கு நான் செல்ல நேரம் ஒதுக்கி உள்ளதாக கேள்விப்பட்டேன். இந்த விஷயத்துல எனக்கு பல பேர் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். அதில் முக்கியமானது, வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும் இந்த நேரத்தில், தேவையில்லாமல் வார்த்தையை விடாதீங்க என சொல்லி இருக்கிறார்கள். புலியை பூனை சண்டைக்கு கூப்பிட்டால் அது போகுமா?, நான் புலி, பூனையுடன் சண்டைக்கு போக மாட்டேன். என் கூட மோதி அவர் பெரிய ஆள் ஆகணும்னு அவர் நினைக்கிறாரு. என்னை எதிர்த்தவனை எல்லாம் நான் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. இத்துடன் இந்த விஷயத்தை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.