எடப்பாடி குறித்து பேசவே கூடாது என்று தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்புபடுத்தி பேச, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்சியுள்ளார். கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் பலியான போது, யாருக்கும் தொடர்பில்லை என அளித்த பேட்டிக்கு முற்றிலும் முரணாக, எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி தற்போது பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி மஞ்சுளா, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கனகராஜ் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பதற்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளதாகவும், தொடர்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தனபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.