பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு அரசே திட்டமிட்டதா?: டிடிவி தினகரன்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர்பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை,நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.44 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது 500 மிலி ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை வாயிலாக ஆவினுக்கு லிட்டருக்கு ரூ.7 நஷ்டம் ஏற்படுகிறது. இதைக் காரணம் காட்டி, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 70 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருவதால் பால் முகவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டு அதற்கு மாறாக கொழுப்புச் சத்து குறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சியில் ஓராண்டில் மட்டும் நான்கு முறை ஆவின் பால் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு, பண்டிகை நெருங்கும் காலங்களில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைப்பது மக்கள் மத்தியில் ஆவின் நிர்வாகம் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பால் திருட்டு, முறைகேடு என ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை நாடிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை எவ்வித தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதோடு, லாப நோக்கம் பார்க்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.