கேரளா விஷ்ணுமாயா கோவில் கட்டளைதாரராக குஷ்பு நியமனம்!

கேரளா விஷ்ணு மாயா கோவில் கட்டளைதாரராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோவில் பெரும் புகழ்பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பு பூஜை செய்ய ஒரு பெண் கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜையான நாரி பூஜைக்கு கோவில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்ற நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு நாரி பூஜையையும் ஏற்றுக்கொண்டார்.

பாரம்பரிய உடையில் இருந்த நடிகை குஷ்புவுக்கு நம்பூதிரிகள் முறைப்படி நாரி பூஜை செய்தனர். நாரி பூஜை போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றதாக பூரிப்புடன் தெரிவித்துள்ளார். திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்வதற்கு தான் அழைக்கப்பட்டதை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர்களே இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் அதுவும் கடவுளே அந்த நபரை தேர்வு செய்வார் என்பது நம்பிக்கை என்றும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.

தன்னை ஆசிர்வதித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என உணர்ந்து, தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கு நல்லது நடக்கும் என்பதை தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அன்பிற்கு உரியவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்ததாகவும் இந்த உலகம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியான இடமாகவும் இருக்க பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஓம் சிவாய நமஹ.. என்றும் நாரி சக்தி என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். விஷ்ணுமாயா கோவிலில் கட்டளைதாரர் என்பவர் அந்த வருடம் முழுவதும் நடக்கும் பூஜைகளுக்கு தேவையான பொருள் செலவுகளை ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.