என்னை கொலை பண்ணிட்டு, அந்தப் பழியை சீமான் மீது போடலாம்னு தான் அவங்க ப்ளான்: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வீரலட்சுமி இன்றைக்கு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த நிலையில், கோபம் தாங்காமல் வரிந்துகட்டிக் கொண்டு வந்து ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

சீமானை சட்ட ரீதியாக எதிர்க்க துணை நிற்பதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் கைகோர்த்தவர் வீரலட்சுமி. சீமானை எப்படியாவது கைது செய்ய வைத்துவிட வேண்டும் என்று விஜயலட்சுமியை தனது பாதுகாப்பில் வைத்திருந்தார் வீரலட்சுமி. பின்னர் ஒரு கட்டத்தில், இவர்கள் இருவருக்கும் நடுவிலேயே மோதல் வெடித்தது. இதனால், விஜயலட்சுமியை ஓரிடத்தில் அடைத்து வைத்து உணவு, நீர் கூட வீரலட்சுமி தரவில்லை எனப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் நிர்வாகிகளின் உதவியுடன் அங்கிருந்து வெளியேறி பெங்களூரு திரும்பிச் சென்றார் விஜயலட்சுமி. சீமான் மீதான வழக்கையும் அவர் வாபஸ் பெற்றார்.

இருந்தபோதிலும், சீமானை விடாமல் வம்பிழுத்து வருகிறார் வீரலட்சுமி. நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கும் சீமானுக்கும் தர்மயுத்தம் தொடங்கிவிட்டதாகவும், அவருக்கு விரைவில் சங்கு ஊதப் போவதாகவும் கூறினார் வீரலட்சுமி. மேலும், சீமானை குள்ள நரி என்றும், தமிழர்களின் விரோதி எனவும் கடுமையான வார்தைகளால் திட்டித் தீர்த்தார்.

இந்நிலையில், இந்த செய்தி ஊடகங்களில் வெளியான அடுத்த ஒரு மணிநேரத்தில் விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சீமானை திட்டியதற்காக வீரலட்சுமியை விளாசி தள்ளியிருக்கிறார் விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

விஜயலட்சுமிக்கு உதவி பண்ண வந்தேன் என்று வீரலட்சுமி எல்லாம் சொல்லவே கூடாது. விஜயலட்சுமிக்கு உதவி பண்றதுக்கெல்லாம் வீரலட்சுமி வரல. விஜயலட்சுமியை வைத்து சீமானை கொச்சப்படுத்தணும்; விஜயலட்சுமியை வைத்து சீமானை கைது செய்ய வைக்கணும். இதுதான் இவங்களுக்கு தேவை. சீமானுக்கு எதிராக ஒரு ஊடக நிருபரிடம் நான் பேச மாட்டேன்னு சொன்னதும், என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கேவலப்படுத்தியதை எல்லாம் நான் வீடியோவா வெளியிட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் எனக்கு சாப்பாடு, தண்ணீ கூட கொடுக்குற வீரலட்சுமி நிப்பாட்டிட்டாங்க.

கொஞ்சம் விட்டிருந்தா என்னை அங்கேயே கொலை பண்ணிட்டு.. அந்தப் பழியை அப்படியே சீமான் மீது போடலாம்னு தான் அவங்க ப்ளான் பண்ணாங்க. அப்புறம் சாட்டை துரைமுருகன் தம்பிகிட்ட சொல்லி, அவர்தான் வந்து என்ன அங்க இருந்து வெளியே கொண்டு வந்தாரு. வீரலட்சுமி.. உங்கள்ட்ட ஒண்ணு சொல்லனும். சீமான் என்னமோ எனக்கு பெருசா செட்டில்மெண்ட் செஞ்சுட்டதா சொல்றீங்கல்ல. அந்த ஆடியோவை கொஞ்சம் டெலிகாஸ்ட் பண்ணி காட்டுங்க. வீரலட்சுமி கிட்ட எல்லாம் நான் ஏன் உதவி கேட்டேன்னு இப்போ வரைக்கும் நான் வருத்தப்பட்டு இருக்கேன். இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.