நான் வாயை திறந்தால் உங்கள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள்: விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி எச்சரிக்கை!

சீமானுக்கு எதிராக பொங்கிய நடிகை விஜயலட்சுமி, இப்போது சீமானை விமர்சித்து வரும் வீரலட்சுமிக்கு பதிலடி கொடுத்து வருவதால், வீரலட்சுமி, “பல விஷயங்கள் வெளியில் வரும்.. ஜாக்கிரதை. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு பாலியல் புகார் கொடுத்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் சீமானுக்கு எதிராக கருத்துகளை கூறி வந்தார். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார் விஜயலட்சுமி. அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் உடன் இருந்தார். மேலும் நடிகை விஜயலட்சுமியை தனது வீட்டில் தங்க வைத்து, சீமானுக்கு எதிரான அவரது சட்ட போராட்டத்திற்கு உதவி செய்து வந்தார் வீரலட்சுமி. இந்தநிலையில் இந்த வழக்கு தொடரபாக சீமானை ஆஜராக போலீசார் சம்மன் அளித்திருந்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் திடீரென சீமான் மீது கொடுத்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக்கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரலட்சுமி, விஜயலட்சுமியை விமர்சனம் செய்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே விஜயலட்சுமி விட்டாலும், நான் விட மாட்டேன் என சீமானை தொடர்ந்து சீண்டி வருகிறார். இதையடுத்து வீரலட்சுமிக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களாக இருவரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. அண்மையில், தன் பெயரை பயன்படுத்தி சீமானை கேவலமாக பேசுவதாக வீரலட்சுமியை குற்றம்சாட்டி இருந்தார் நடிகை விஜயலட்சுமி. கொஞ்சம் விட்டிருந்தால் என்னை அங்கேயே கொலை செய்துவிட்டு அந்தப் பழியை அப்படியே சீமான் மீது போடலாம் என அவர்கள் பிளான் செய்திருந்தார்கள் என வீரலட்சுமி பற்றி பகீர் கருத்தைக் கூறியிருந்தார் விஜயலட்சுமி.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவிய நிலையில் அதற்கு பதிலடியாக இன்று வீரலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

சீமான் மீது புகார் கொடுக்க நானா உங்களை அழைத்தேன்? நீங்களாகவே சென்னைக்கு வந்து ஹோட்டலில் தங்கிக்கொண்டு எனக்கு போன் செய்து ஆதரவு கேட்டீர்கள். பெண் என்ற அடிப்படையில் நானும் உதவி செய்தேன். தமிழ்நாட்டில் உங்களைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவி செய்ய மாட்டார்கள் என அழுதீர்கள். தங்கி இருந்த ஹோட்டல் ரூமை காலி செய்ய முடியாமல் இருந்த நிலையில் நான் பணம் கொடுத்து உங்களை கூட்டி வந்தேன். திருக்கழுக்குன்றத்தில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்க வைத்தேன். என் சித்தப்பாவின் ஸ்டேட்டஸுக்கு நீங்கள் எல்லாம் அவர் வீட்டு வாசலில் கூட நிற்கக்கூடாது. நான் கேட்டதால் உங்களை தங்கவிட்டார். என் கணவர் பூவை கணேசன் காலில் விழுந்து நீங்கள் கெஞ்சியதால் உங்களுக்கு உதவ சம்மதித்தோம். இப்போது நீங்கள் உங்களுக்கு நாங்கள் சாப்பாடு போடவில்லை என்று சொல்கிறீர்கள். நன்றியை மறந்துவிட்டு உங்களை கொலை செய்ய முயன்றதாக பழி போடுகிறீர்கள். உங்களுக்கு நான் லாஸ்ட் வார்னிங் தருகிறேன். இதற்கு மேல் எங்கள் மீது அபாண்ட பழி போட்டு வீடியோ வெளியிட்டால் நான் பல விஷயங்களை பற்றி வாயை திறக்க வேண்டியது வரும். நான் வாயை திறந்தால் உங்கள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.