ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி மாற்றம்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை நவம்பர் 23-ம் தேதியிலிருந்து நவம்பர் 25-ம் தேதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராஜஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் அதிக அளவில் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் மாநிலத்தில் தேர்தல் தேதியை மாற்றிமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடமிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்களும் பிரதிநிதித்துவங்களும் வந்தன. அன்றைய தினம் தேர்தல் நடைபெற்றால் அது பெரிய அளவில் மக்கள் வாக்குப்பதிவில் பங்கேற்பதை பாதிக்கும், பாதுகாப்பு சிக்கல்களும் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரதிநிதித்துவம் மற்றும் காரணிகளைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் தேர்தல் தேதியை நவம்பர் 23-ம் தேதியில் இருந்து நவம்பர் 25-ம் தேதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முன்னதாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா சட்டப்பேரவை பதவிக் காலம் வரும் 2024 ஜனவரியில் வெவ்வேறு தேதிகளிலும், மிசோரம் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் டிச.17-ம் தேதியும் முடிவடைகிறது. அதனால், அக்.9ம் தேதி 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30-ம் தேதி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.