விஜய தசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் ஐகோர்ட்டில் மனு!

தமிழ்நாட்டின் 14 தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆர்.எஸ்.எஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் விஜய தசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு, அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம், அனுமதி கோரி மனு அளித்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், இதுவரை காவல்துறை தரப்பில் இருந்து அனுமதியும் தரவில்லை, பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பேரணி நடத்த நாள் நெருங்குவதால் இன்னும் அனுமதி கிடைக்கப்பெறாத காரணத்தால் ஆர்.எஸ்.எஸ். சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆர்எஸ்எஸ் தொடக்க நாளான விஜயதசமி நாளை முன்னிட்டு , வரும் அக்டோபர் 22ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி 12 மாவட்டங்களிலும் என 14 தென் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் பேரணி நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் இன்னும் அனுமதி அளிக்காத காரணத்தால், நீதிமன்றம் தலையிட்டு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளங்கோவன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்டு அதற்கு தமிழ்நாடு காவல் துறை மறுப்பு தெரிவித்ததால், வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும் மறுப்பு தெரிவித்ததால், உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான தீர்ப்பில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நிபந்தனைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.