ரூ.1,000 உரிமைத் தொகை: அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!

அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக அறிவித்துவிட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஏராளமான ஏழை பெண்களுக்கு ரூ.1000 வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.

இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 9 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அதில் தகுதியுள்ளவர்களுக்கு ரூ.1000 கட்டாயமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, மேல்முறையீடு செய்த பெண்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. மேல்முறையீடு செய்துள்ள குடும்பத் தலைவிகளில் பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து சென்னையில் துணை ஆட்சியர்கள் – சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சி நடத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கக்கோரி விழுப்புரத்தில் அக்டோபர் 18ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும், இரண்டு கோடியே 27 லட்சம் குடும்பத் தலைவிகள் இருக்கும் தமிழ்நாட்டில், மகளிர் உரிமைத் தொகை 60% சகோதரிகளுக்குக் கிடைக்கவில்லை எனவும், மகளிர் உரிமைத்தொகை திட்டம் சில மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.