தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்

தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் இரு தினங்களாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் 1: தமிழகத்தில் சமீப காலத்தில் என்கவுன்டர் மூலம் குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1 அன்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற என்கவுண்டரில் வினோத், ரமேஷ் ஆகிய இருவரும், செப்டம்பர் 16 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சோக்கண்டி என்ற பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் விஷ்வா என்பவரும், அக்டோபர் 11 அன்று திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் என்கவுண்டரில் பார்த்திபன், முத்துசரவணன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும்போது குற்றம் சுமத்தப்பட்ட சிலர் கை, கால், எலும்பு முறிந்து ஆஜர்படுத்தப்படுவதும், விசாரணையில் அவர்கள் வழுக்கி கீழே விழுந்து அடிபட்டதாக சொல்லப்படுவதும் நம்பும்படியாக இல்லை. குற்றங்கள் அதிகரிக்காமல் தடுப்பதற்காக காவல்துறையும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் வலுவான புலன் விசாரணை கட்டமைப்பினை உருவாக்கிட வேண்டும்.

அதேசமயம் எப்படிப்பட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்டாலும், நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றங்களை நிரூபித்து சட்டத்தின் படி தண்டனை பெற்றுத் தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே நேரடியாக தண்டனை வழங்கும் நோக்கோடு என்கவுண்டர் கொலைகள் செய்வதை நாகரிக சமூகத்தால் அனுமதிக்க முடியாது. நடைபெற்றுள்ள என்கவுண்டர்கள் மீது சட்டப்படியான விசாரணை நடத்திடவும், மேலும் என்கவுண்டர் கொலைகள் நடக்காமல் இருக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்துள்ள பயனாளிகளுக்கான ஊதியத்தை மாதக் கணக்கில் வழங்காமல் காலம் தாழ்த்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பருவமழை குறைவு, கர்நாடகத்திலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காதது கடுமையான கிராமப்புற வேலையின்மையை உருவாக்கியுள்ளது. அதோடு அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலையேற்றம் கிராமப்புற ஏழைகளை வாட்டி வதைக்கும் நிலையில், வேலை செய்ததற்கான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பது மக்களை மேலும் வதைக்கும் செயலாகும்.ஆகவே, ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில், ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை காலதாமதமின்றி உடனே வழங்கிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.