இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: கனிமொழி

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஏனென்றால் இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மெகபூபா முப்தி, சமாஜ்வாதி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட பெண் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்த திமுக எம்.பி. கனிமொழி ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் இந்த மகளிர் உரிமை மாநாட்டிற்கு பல நூறு ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் மதிக்கப்படும் அதே சமயத்தில், அவர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது காலம் காலமாக தொடர்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

படிக்க ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களின் குடும்பத்தில் நிலவும் வறுமையால் அவர்களால் படிக்க முடியாத சூழல் ஏற்படும். அதுபோன்ற பெண்கள் யாரும், படிப்பை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை கைதூக்கிவிடுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டம். குடும்பப் பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுதான் திராவிட மாடல்.

ஆனால், பாஜக ஆட்சியில் இந்தியாவில் என்ன நடக்கிறது? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்தான் நாட்டில் நிலவி வருகிறது. மணிப்பூரை விட இதற்கு உதாரணமாக வேறு எதை சொல்ல முடியும்? அங்கு ஒவ்வொரு பெண்களும் படும் அவஸ்தையை நேரில் சென்று பார்த்தவர்கள் நாங்கள். ஆனால் அதை பற்றி பாஜக வாய் திறக்காது. இதே பாஜக தான் ஒருகாலத்தில் குஜராத்திலும் அட்டூழியத்திலும், அராஜகத்திலும் ஈடுபட்டது. அந்த சமயத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒரு குடியரசுத் தலைவரே அவமதிக்கப்படுவதை வேறு எங்கு பார்க்க முடியும்? கோயில் முதல் நாடாளுமன்றம் வரையில் எங்கேயும் குடியரசுத் தலைவரை பாஜக அனுமதிப்பதில்லை. இந்த பாஜக தான் பெண் உரிமை பற்றி பேசி வருகிறது. இப்போது பாஜக நிறைவேற்றி இருக்கிறதே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டம். அது இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைப்படுத்தப்படாது.

சரி, நமது பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் என்ன நடக்கிறது? ஒரு பட்டியலினப் பெண் என்பதால் அந்த அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ஏனென்றால் இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி. 11 பெண் மேயர்களை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். இங்கு படிக்கும் பெண்களும் அதிகம். வேலைக்கு செல்லும் பெண்களும் அதிகம். இவ்வாறு கனிமொழி பேசினார்.