உதயநிதியின் சனாதன பேச்சுக்கு தேர்தலில் பதில் கொடுங்க: பியூஸ் கோயல்

ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக மற்றும் காங்கிரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும், சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தலில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

வரும் லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் இறுதியில் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்கியது. அண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரை சென்றார். 2 கட்ட பாதயாத்திரையை நிறைவு செய்த அண்ணாமலை 3ம் கட்டமாக இன்று திருப்பூரில் யாத்திரை தொடங்குகிறார். முன்னதாக அவருக்கு ஒரு வார கால ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்து அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3-வது கட்ட பாதயாத்திரையை தொடங்கும் நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல் முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். அப்போது பியூஷ் கோயல் கூறியதாவது –

சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை உலக நாடுகளுக்கு கொண்டு செல்கிறார். ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக, காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.